சென்னை: வங்கி சாரா நிதி நிறுவனமான இன்டெல் மணி கடந்த 2025-ம் நிதியாண்டில் கடன் வழங்கலில் 69 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதுகுறித்து இன்டெல் மணி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியுமான உமேஷ் மோகன் கூறியதாவது: போட்டி நிறைந்த சூழலில் இன்டெல் மணி கடந்த நிதியாண்டில் கடன் வழங்கலில் 69 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. அதேபோன்று சொத்து பராமரிப்பில் 52 சதவீதம் வளர்ச்சியை சாத்தியமாக்கி ரூ.2,400 கோடியை நிர்வகிக்கும் அளவுக்கு நிறுவனம் வளர்ந்துள்ளது.
இதேபோல நடப்பு 2025-26-ம் நிதியாண்டிலும் சிறப்பான வளர்ச்சியை எட்ட உறுதியெடுத்துள்ளோம். அதன்படி இந்த நிதியாண்டில் ரூ.10,000 கோடி கடன் வழங்கவும், சொத்து நிர்வாகத்தை 4,000 கோடியாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
கடந்த நிதியாண்டில் நிறுவனம் ரூ.61 கோடி லாபத்தை பதிவு செய்த நிலையில், ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சியை தக்கவைத்துள்ளோம். எதிர்வரும் காலாண்டுகளில் வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வளர்ச்சிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு உமேஷ் மோகன் தெரிவித்தார்.