இந்திய விமானப் படையின் ரஃபேல் போர் விமானங்கள், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், விமானப்படைத் தளங்கள் மீது நடத்திய துல்லிய தாக்குதல்களால் பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்தின் பங்குகள் 66 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கி உள்ளது. இவை இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு ஹரியானாவின் அம்பாலா, மேற்குவங்கத்தின் ஹசிமாரா விமானப்படைத் தளங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன.
கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை, இந்திய போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசி அழித்தன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையில் இந்திய விமானப் படையின் ரஃபேல் போர் விமானங்கள் முக்கிய பங்கு வகித்தன. அந்த போர் விமானத்தில் சீறிப் பாய்ந்த ஸ்கால்ப்-இஜி ஏவுகணைகள் தீவிரவாத முகாம்களை மிகத் துல்லியமாக தாக்கி தரைமட்டமாக்கின.
பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாமல் இந்திய எல்லையில் இருந்தே சுமார் 100 கி.மீ. தொலைவில் இருந்த தீவிரவாத முகாம்களை ரஃபேல் போர் விமானங்கள் அழித்தது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு கடந்த 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. இந்த சண்டையிலும் ரஃபேல் போர் விமானங்கள், பாகிஸ்தான் விமானப் படையை திணறடித்தன.
குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ தலைமையகமான ராவல் பிண்டியில் உள்ள நூர்கான் விமான படைத் தளம், அந்த நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் விமான படைத்தளம், போலாரி விமான படைத் தளம், ஜோகோபாபாத் விமான படைத் தளம், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷோர்கோட் விமான படைத் தளம், முரித் விமான படைத் தளம், சியால்காட் விமான படைத் தளம், பஸ்ரூர் விமான படைத் தளம், சுனியன் விமான படைத் தளம், சர்கோதா விமான படைத் தளம் ஆகியவற்றின் மீது ரஃபேல், சுகோய், மிராஜ் ரக போர் விமானங்கள் சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசி தொடர் தாக்குதல்களை நடத்தின.
இந்திய விமானப் படையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் அரசு நாடியது. அமெரிக்காவின் அறிவுறுத்தலின்படி பாகிஸ்தான் ராணுவ மூத்த அதிகாரி, இந்திய ராணுவ அதிகாரியை ஹாட்லைனில் தொடர்பு கொண்டு நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பிறகு இரு நாடுகளுக்கு இடையே நேற்று முன்தினம் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்திய ராணுவம், விமானப் படையை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் பணிந்திருக்கிறது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சூழலில் ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் தஸ்ஸோ நிறுவனத்தின் பங்குகள் ஐரோப்பிய பங்கு சந்தையில் 66.7 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. மேலும் ரஃபேல் போர் விமானங்களை வாங்கள் பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்திய கடற்படைக்காக ரூ.63,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த போர் விமானங்கள் அடுத்த 37 மாதங்கள் முதல் 65 மாதங்களில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இவை ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகிய போர்க்கப்பல்களில் நிலைநிறுத்தப்பட உள்ளன. இதன்பிறகு இந்திய கடற்படையின் பலம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.