புதுடெல்லி: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு, உலக நாடுகளுக்கு அதிக வரியை விதித்து வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார்.
அத்துடன் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்திருப்பதற்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் தனது வலைதளத்தில் கூறும்போது, “ரஷ்யாவுடன் சேர்ந்து இந்திய பொருளாதாரமும் செயலிழந்து விட்டது. அதை பற்றி எனக்கு கவலையில்லை” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்று அமெரிக்காவிலேயே உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தளங்களில் (ஏஐ பிளாட்பார்ம்), ட்ரம்ப் கூறியபடி இந்திய பொருளாதாரம் செயலிழந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அந்த ஏஐ தளங்கள் நேரெதிராக கருத்து தெரிவித்துள்ளன. சேட்ஜிபிடி, கிராக், ஜெமினி, மெட்டா ஏஐ, கோபைலட் ஆகிய 5 ஏஐ தளங்களில், ‘இந்திய பொருளாதாரம் செயலிழந்து விட்டதா?’ என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அந்த தளங்கள் அனைத்தும் ட்ரம்ப் கருத்துக்கு நேரெதிராக கருத்து தெரிவித்துள்ளன. அந்த ஏஐ தளங்கள் அளித்த பதில்கள் வருமாறு:
சாட்ஜிபிடி: இந்திய பொருளாதாரம் செயலிழந்து விட்டது என்பதற்கு மிக நீண்ட தூரத்தில் உள்ளது. இந்திய பொருளாதாரம் துடிப்புடன் உள்ளது. லட்சியத்துடன் உள்ளது.
கிராக்: இல்லை… இந்திய பொருளாதாரம் செயலிழக்கவில்லை. உலகளவில் மிக வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
ஜெமினி: இந்திய பொருளாதாரம் மிக வேகமாகவும் வலிமையாகவும் வளர்ந்து வருகிறது.
மெட்டா ஏஐ: இந்திய பொருளாதாரம் செயலிழக்கவில்லை. உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாகி வருகிறது.
கோபைலட்: செயலிழந்துவிட்டது என்பதற்கு அருகில் கூட இல்லை. உண்மையில் செயலிழந்துவிட்டது என்பதற்கு நேரெதிராக உள்ளது. இப்படி அமெரிக்காவிலேயே உருவாக்கப்பட்ட ஏஐ தளங்கள் ட்ரம்ப் கருத்தை மறுத்து உண்மையை கூறியுள்ளன.