புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற கவுடில்யா பொருளாதார மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளாவிய பிரச்சினைகள் எல்லாம் தீவிரம் அடைந்து வருகின்றன. வரி விதிப்புகள், தடைகள், பிரிக்கும் யுக்திகள் எல்லாம் உலகளாவிய நுகர்வு சங்கிலியை மாற்றியமைக்கின்றன. இந்த மாற்றங்கள் இந்தியாவின் பலவீனம் மற்றும் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துகிறது. மாற்றங்கள் மற்றும் அதிர்வுகளை தாங்கும் திறனை வரவேற்கிறோம். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது, இந்தியா மூடப்பட்ட பொருளாதாரமாக இருக்க விரும்புகிறது என அர்த்தம் அல்ல.
வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய நாம், மொத்த உள்நாட்டு உற்பத்தியை 8 சதவீதமாக உயர்த்த வேண்டும். உள்நாட்டு வர்த்தக நிலவரம் வலுவாக உள்ளது. இது உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்றதன்மையால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும். இந்தியாவின் பொருளாதாரம் எதையும் தாங்கும் திறன் படைத்தது. அது தொடர்ந்து நிலையாக வளரும். உலகளாவிய வர்த்தகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல், நிலையான மற்றும் எதிர்பாராத ஒத்துழைப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கும். நமது விதியை தீர்மானிக்கும் முடிவுகள் உலகில் எங்கோ எடுக்கப்படும்போது நாம் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்க முடியாது. அதில் நாம் தீவிர பங்காற்றி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.