பாகிஸ்தானில் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார் மற்றும் அமைப்பை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கி அழித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 412 புள்ளிகளை இழந்து 80,334 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிப்டி-50 குறியீட்டெண் 141 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 24,273 புள்ளிகளில் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.90% மற்றும் 1.05 % சரிந்தன.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு குறைந்ததால் நேற்று ஒரே வர்த்தக தினத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை பங்குகளின் சந்தை மூலதன மதிப்பு ரூ.423.50 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நேற்று ரூ.418.50 லட்சம் கோடியாக சரிவடைந்தது.
பாகிஸ்தான் சந்தையில் கடும் வீழ்ச்சி: இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு காணப்படுகிறது. நேற்றைய வர்த்தகத்தில் கேஎஸ்இ-30 7% வரை வீழ்ச்சியடைந்தது. கேஎஸ்இ-100 குறியீட்டெண் 7,000 புள்ளிகள் வரை குறைந்து முதலீட்டாளர்களுக்கு அதிரச்சியை ஏற்படுத்தியது. கேஎஸ்இ-100 புதன்கிழமை 3,559 புள்ளிகள் சரிந்து 1,10,009-ல் வர்த்தகமான நிலையில் நேற்று 6,948 புள்ளிகள் அதாவது 6.32 சதவீதம் குறைந்து 1,03,060-ஆனது.