புதுடெல்லி: இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் உடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பு நடைபெற்றது. இரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களுக்கான வணிகங்கள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளன. அதனை முன்வைத்து மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கோயல் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகள் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதால் ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் கட்டணங்களை குறைப்பதற்கான முதல் கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவும் அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருகின்றன.
இரு நாடுகளும் வரிகளைக் குறைப்பதில் உடன்பாடு ஏற்படும்பட்சத்தில் அது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வாஷிங்டன் பயணத்தின் போது வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவதை இலக்ககாக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.