புதுடெல்லி: இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டில் நாட்டின் வறுமை விகிதம் 4.6 சதவீதமாக சரிவடைந்துள்ளதாக எஸ்பிஐ-யின் மதிப்பீட்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்பிஐ ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2023-ம் ஆண்டில் வறுமை விகிதம் 5.3 சதவீதமாக இருந்தது என உலக வங்கி மதிப்பீடு செய்திருந்தது. இந்த நிலையில் 2024-ல் வறுமை விகிதம் அதனுடன் ஒப்பிடுகையில் 4.6 சதவீதமாக கணிசமாக குறைந்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் வறுமையின் பிடியிலிருந்து விடுபடுவோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது தற்போதைய மதிப்பீடுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது. இவ்வாறு எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய வறுமை கோட்டுக்கான வரையறையை உலக வங்கி அண்மையில் மாற்றியமைத்தது. அதன்படி, நாளொன்றுக்கு 2.15 டாலரிலிருந்து 3 டாலராக அந்த வரையறையை திருத்தியது. இது, உலகளவில் தீவிர வறுமையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை 22.6 கோடி அதிகரித்தது. இந்த நிலையில் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உலகளாவிய வறுமையின் எண்ணிக்கையை 12.5 கோடி குறைக்க உதவியது.
பொருளாதார சீர்திருத்தம் மற்றும் இலக்கு நோக்கிய சமூக நலத் திட்டங்களின் விளைவால் இந்தியாவின் வறுமை விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.