புதுடெல்லி: இந்தியாவில் உள்ள ஆப்பிள் நிறுவன ஒப்பந்த உற்பத்தியாளர்கள் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 2 கோடியே 40 லட்சம் ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளனர். 2024-ம் ஆண்டின் இதே 5 மாத காலப் பகுதியுடன் ஒப்பிடும்போது, இது 57 சதவீதம் அதிகம் என்று ஆராய்ச்சி நிறுவனமான கேனலிஸின் (ஓம்டியா) புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவன உற்பத்திக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்த போதிலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களில் 77 சதவீதம் அமெரிக்காவுக்குச் சென்றன. மே 2025 நிலவரப்படி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்கள் 77 சதவீதமாகும். இது 2024-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 54 சதவீதமாக இருந்தது.
இந்த ஆண்டு இதுவரை இந்தியாவில் இருந்து செய்யப்பட்ட மொத்த ஐபோன் ஏற்றுமதியில் 52 சதவீதத்துடன் பாக்ஸ்கான் முன்னணியில் இருந்தாலும், ஆப்பிளின் இந்திய உற்பத்தியில் இப்போது டாடா விரைவாக ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. டாடாவின் ஐபோன் உற்பத்தி பங்கு 2024-ல் 13 சதவீதத்தில் இருந்து 2025-ம் ஆண்டில் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. டாடா நிறுவனம் கடந்த ஐந்து மாதங்களில் 75 லட்சத்துக்கும் அதிகமான ஐபோன்களை ஏற்றுமதி செய்தது என்று கேனலிஸின் மொபிலிட்டி (ஓம்டியா) மூத்த ஆய்வாளர் சன்யம் சவுராசியா கூறினார்.
மே மாதத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து ஐபோன்களிலும் 89% அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. இது கடந்த ஆண்டு 58% ஆக இருந்தது. இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு ஏப்ரல் மாதத்தில் 80% ஆகவும், மார்ச் மாதத்தில் 87% ஆகவும் இருந்தது என்று கேனலிஸ் தெரிவித்துள்ளது. இது சீனத் தயாரிப்புகள் மீதான அமெரிக்க வரிகளைத் தவிர்ப்பதற்கான ஆப்பிளின் உத்தியின் தெளிவான பிரதிபலிப்பாகும்.
புவிசார் அரசியல் மற்றும் வரி விகிதங்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்க ஆப்பிள் தனது இந்திய உற்பத்தி தடத்தை தீவிரமாக விரிவுபடுத்துகிறது.
2026-ம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்களை இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. எனவே, அந்நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை வேகமாக அதிகரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பரில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ஐபோன் 17 ப்ரோ மாடல்களுக்கான உற்பத்தியையும் இந்தியாவில் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் பாக்ஸ்கான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு 4.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்களை அனுப்பியுள்ளது. இது 2024-ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்த 3.7 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என கேனலிஸ் தெரிவித்துள்ளது.