புதுடெல்லி: இந்தியாவில் மிகப் பணக்காரர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகமான அளவில் இருக்கும் என்றும் வரும் 2023 – 2028 -க்குள் அவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருக்கும் என்று மெக்கின்சி அண்ட் கம்பெனி மற்றும் பிஓஎஃப் அறிக்கை தெரிவித்துள்ளது.
மக்கள்தொகை மற்றும் உள்கட்டமைப்பு மாற்றங்களால் 2025 இந்திய சொகுசு பேஷன்களுக்கான சந்தை 15 முதல் 20 சதவீதம் வரை வளரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, ஜியோ வேர்ல்ட் பிளாசா மற்றும் கேலரீஸ் லாஃபாயேட் போன்ற புதிய சொகுசு மால்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் முதல் நிலை நகரங்களில் அதிகரித்து வருகின்றன. மேலும் அதில், ரூ.7 லட்சத்துக்கும் மேல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிகாக அறிவிக்கப்பட்ட வரிகள், உள்நாட்டு செலவினங்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் ஆடம்பர பொருட்களுக்கான ஜிஎஸ்டி இன்னும் 28 சதவீதமாக இருந்து வருகிறது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில், ஜப்பானின் சொகுசுச் சந்தையின் வளர்ச்சி 2025க்குள் 6 மற்றும் 10 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிய சந்தைகளின் வளர்ச்சி அதன் உள்நாட்டுத்தேவை மற்றும் சுற்றுலா செலவினங்களால் இயக்கப்படுகிறது.
நிதிஆயோக்கின் சிஇஓ பிவிஆர் சுப்பிரமணியன் சமீபத்தில், ஜப்பானைப் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது என்று அறிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி, இந்தியாவின் பொருளாதாரம். 4 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆசியாவிலேயே, இரண்டாவது பெரிய எண்ணிக்கையில் மிக அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களின் (ultra-high-net-worth individuals) தாயகமாக ஜப்பான் உள்ளது. 2025 – 2028-க்கு இது 12 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானை ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.