மும்பை: மும்பையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம்தோறும் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருவதாக சொல்லும் பதிவு ஒன்று நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகுல் ரூபானி தனது லிங்க்டுஇன் பக்கத்தில் வெளியிட்ட பகிர்வில், “நான் இந்த வாரம் விசா விண்ணப்பிக்கும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க தூதரகத்துக்கு சென்றிருந்தேன். அப்போது, பாதுகாப்பு அதிகாரிகள் எனது பையை உள்ளே எடுத்துச் செல்ல முடியாது என்று சொன்னார்கள். அங்கு எந்தவித லாக்கர்களும் இல்லை,
பையை என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். அப்போது, அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் என்னைப் பார்த்து கை அசைத்தார். பையை என்னிடம் தந்துவிட்டுச் செல்லுங்கள். நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்றார். ஆனால், பையை பார்த்துக் கொள்வதற்கான கட்டணம் ரூ.1000 தர வேண்டும் என்றார். பையை கொடுக்க முதலில் தயக்கமாக இருந்தது. பின்னர் வேறு வழியில்லாமல், பையை கொடுத்துவிட்டு அலுவலகத்துக்குச் சென்றுவிட்டேன். அதன் பிறகுதான் புரிந்தது, இது அருமையான பிசினஸ் என்று.
அந்த ஓட்டுநர் ஆட்டோ ஓட்டாமலேயே ஆட்டோவை வைத்து நன்றாக சம்பாதிக்கிறார். இதுமட்டுமல்லாமல் ஒருசில சமயம் அதிகளவிலான பைகளை பாதுகாக்க வைக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், அதனைப் பாதுகாப்பாக வைப்பதற்காக காவல் அதிகாரி ஒருவருடன் ஒப்பந்தமும் செய்துள்ளார். அவர் பைகளை பாதுகாப்பாக வைத்து திரும்பக் கொடுக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
பயனர் ஒருவர், “அது அவருடைய வருமானம் மட்டுமல்ல. அவருக்கு கிடைக்கும் வருமானத்தில் காவல் துறை உட்பட பலருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மேலும், 500 ரூபாய் கட்டணத்தில் தூதரகத்திற்குள் லாக்கர் வசதி உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.