புதுடெல்லி: அமெரிக்காவுடன் இந்தியா சிறந்த மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவின் மிக முக்கிய மற்றும் முன்னணி வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. எனவே இந்தியா – அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வரும் 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய நமது இலக்குகளையும், லட்சியத்தையும் கருத்தில் கொண்டு உலகின் வலுவான பொருளாதாரங்களுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களை செய்து முடிக்க தீவிரம் காட்ட வேண்டும்.
அந்த வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்துதான் என்னுடையதும். அமெரிக்கா-இந்தியாவுக்கு இடையில் சிறந்த மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். இதற்காக இந்தியா ஆழமான ஈடுபாட்டை கொண்டிருந்தாலும் முக்கியமான துறைகளில் சமரசம் செய்யாது. குறிப்பாக, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் உட்பட உள்நாட்டு நலன்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிகளவில் வரி விதிப்பதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதற்கு பதிலடியாக இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் கூடுதல் வரி விதித்தார். இருப்பினும், நடவடிக்கைகளை ஜூலை 9-ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். அதற்கான காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.