புதுடெல்லி: அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கி வருகிறது. 4 சரக்கு கப்பல்களில் ரஷ்ய கச்சா எண்ணெய் குஜராத் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யா, உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
இந்த போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் முழுமையாக நிறுத்திவிட்டன. இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. தற்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது.
இந்த சூழலில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார். இந்த சூழலில் அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவில் இருந்து 4 சரக்கு கப்பல்களில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்திய, ரஷ்ய கூட்டு நிறுவனமான நயாரா, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் குஜராத்தின் வாடினார் நகரில் செயல்படுகிறது. ரஷ்யாவில் இருந்து சரக்கு கப்பல்களில் வரும் கச்சா எண்ணெய் இந்த நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் 100 சரக்கு கப்பல்கள் மற்றும் நயாரா நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பேரல்களுடன் 4 சரக்கு கப்பல்கள் குஜராத் வந்துள்ளன. இவை வாடினாரில் உள்ள நயாரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய துறைமுகத்துக்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக அருகில் உள்ள முந்த்ரா துறைமுகத்துக்கு 4 சரக்கு கப்பல்களும் சென்றுள்ளன. இதன்மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில் இருந்து தப்பிக்க முடியும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.