சென்னை: அட்சய திருதியை தினமான இன்று நகைக் கடைகளில் சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கவும், காலை 6 மணிக்கே நகைக் கடைகளை திறக்கவும், நகைகளுக்கு லட்சுமி குபேர பூஜை செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று இரவு 8.40 மணிக்குத் தொடங்கி, இன்று (30-ம்) மாலை 6.45 மணிவரை நீடிக்கிறது. இதையடுத்து, நகை வியாபாரிகள் இன்று காலையிலேயே அட்சய திருதியை சிறப்பு விற்பனையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, “அட்சய திருதியை தினத்தையொட்டி சென்னையில் தி.நகர், மயிலாப்பூர், பாரிமுனை, புரசைவாக்கம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் உள்ள நகைக் கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்படும்.
பல கடைகளில் கூட்டத்தை சமாளிக்க சிறப்புக் கவுன்ட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தங்கக் காசுகள், டாலர்கள் ஆகியவற்றை வாங்குபவர்கள், ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் உள்ளிட்டோர் தாமதமின்றி வாங்கிச் செல்வதற்கு வசதியாக விரைவு கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு, சலுகைகளை அறிவித்துள்ளன. சில கடைகளில் பவுனுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கடைகளில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரத்தில் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகைக் கடைகளில் புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, எடை குறைவான நெக்லஸ், ஃபேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் ஆகியவை புதிய ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, வைரம், பிளாட்டினம் நகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்று நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில நகைக் கடைகளில் லட்சுமி குபேர பூஜை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.8,980-க்கும், பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.71,840-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.78,368-க்கு விற்பனையானது. இதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனையானது.