சென்னை: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டையில் 5-வது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து, ‘தகைசால் தமிழர்’ விருது கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கி கவுரவித்தார்.
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில், தேசிய கொடியை முதல்வர் ஸ்டாலின் 5-வது முறையாக ஏற்றி வைத்தார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க காலை 8.48 மணிக்கு கோட்டைக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். அதன் பின்னர், தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர் லெப்டின்ட் ஜெனரல் ஶ்ரீ ஹரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய், ஏர் கமாண்டர் தபன் சர்மா, கடலோர காவல் படை டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாலகிருஷ்ணன் முருகன், தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், கூடுதல் காவல் துறை இயக்குநர் டேவிட் சன் தேவாசீர்வாதம், சென்னை காவல்துறை ஆணையர் அருண் ஆகியோரை தலைமைச் செயலாளர் முருகானந்தம் முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து, தமிழக காவல்துறை மற்றும் கேரள காவல்துறையினர் நடத்திய அணி வகுப்பு மரியாதையை திறந்த வெளி ஜீப்பில் முதல்வர் பார்வையிட்டார். அதன் பிறகு, கோட்டையில், தேசிய கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றினார். இதைத்தொடர்ந்து, இந்தாண்டுக்கான “தகைசால் தமிழர் விருது” பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கும் , டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது இஸ்ரோ தலைவர் நாராயணனுக் கும், துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது செல்வி.துளசிமதி முருகேசனுக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
இதுபோல, முதலமைச்சரின் நல்ல ஆளுமை விருது சமுதாய பங்கேற்பு மூலம் மாற்றத்தை கொண்டு வரும் ஊரக மேம்பாட்டு முயற்சிகள் பிரிவில் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா குமார், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
கட்டிட வரைப்பட அனுமதிகளை எளிதாக்கி பிரிவில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு இயக்கம் இயக்குநர் கணேசன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை நலத் திட்டங்களை செயல்படுத்தியது பிரிவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை செயலாளர் லஷ்மி பிரியா, ஆதி திராவிடர் நல ஆணையர் ஆனந்த், பழங்குடியில் நலத்துறை புகைப்பட அண்ணாதுரை, தாட்கோ இயக்குனர் கந்தசாமி ஆகியோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது (குழு) வழங்கப்பட்டது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலை இணைக்கும் கண்ணாடி பலம் அமைத்ததற்காக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், தமிழ் மொழியை உலக அளவில் மேம்பட முயற்சியை எடுத்த தமிழ் இணைய கல்வி கழகத்தின் இணை இயக்குநர் கோமகன் ஆகியோருக்கு நல் ஆளுமை விருதை (அமைப்பு) முதல்வர் வழங்கினார்.
இந்த ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர் விருது திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் குமரவேல் சண்முக சுந்தரமுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த நிறுவனமான எக்காம் வெல் மாற்றுத் திறனாளிக்கான மறுவாழ்வு மையத்துக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூக பணியாளர் கோவையைச் சேர்ந்த குணசேகரன் ஜெகதீசனுக்கும், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பணி அமைத்திய நிறுவனமாக பெல் பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு விருதை முதல்வர் வழங்கினர்.
சமூக நலத்திற்கான மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான விருதுகள் பிரிவில், மகளிர் நலனுக்காக பணியாற்றிய சிறந்த சமூக சேவகர் விருது சென்னையைச் சேர்ந்த பாகீரதி ராமமூர்த்தி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோருக்கும், மகளிர் நல்லதாக பணியாற்ற சிறந்த தொண்டு நிறுவனமான கருணாலய சமூக சேவை நிறுவனம் ( சென்னை), சொசைட்டி ஃபார் எஜுகேசன் வில்லேஜ் ஆக்சன் மற்றும் இம்ப்ரூவ்மெண்ட் (திருச்சி) நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள் பிரிவில், சென்னை மாநகராட்சியின் சிறந்த மண்டலமாக முதல் பரிசு 6-வது மண்டலத்துக்கும், இரண்டாவது பரிசாக 13-வது மண்டலத்துக்கும், சிறந்த மாநகராட்சி பிரிவி் முதல் பரிசு ஆவடி மாநகராட்சிக்கு, இரண்டாவது இடம் நாமக்கல் மாநகராட்சிக்கும், சிறந்த நகராட்சியாக முதல் பரிசு ராஜபாளையம் நகராட்சிக்கும், இரண்டாவது பரிசாக ராமேஸ்வரம் நகராட்சிக்கும், மூன்றாவது பரிசாக பெரம்பலூர் நகராட்சிக்கும், சிறந்த பேரூராட்சியாக முதல் பரிசு உத்திரமேரூர் பேரூராட்சிக்கும், இரண்டாவது பரிசு காட்டுப்புத்தூர் பேரூராட்சிக்கும், மூன்றாம் பரிசு நத்தம் பேரூராட்சிக்கும் வழங்கப்பட்டது.
அதேபோல் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகளில் ஆண்கள் பிரிவில் விழுப்புரத்தைச் சேர்ந்த சந்துரு குமார், திருநெல்வேலி சேர்ந்தச் ஜெயக்குமார், சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன், பெண்கள் பிரிவில் சென்னை சேர்ந்த காஜிமா, புதுக்கோட்டையை சேர்ந்த லாவண்யா, கிருஷ்ணகிரி சேர்ந்த கௌரி ஆகியோருக்கு முதல்வர் விருதுகளை வழங்கினார்.
இதன் பின்னர் தகைச்சால் தமிழர் விருத்தாளர் காதர் மொகிதீன் மற்றும் விருதுப் பெற்றவர்களுடன் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும், விருதாளர்களுடன் குழுப்புகைப்படமும் முதல்வர் எடுத்துக் கொண்டார். முன்னதாக, முதல்வர் ஒன்பது அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சி இறுதியாக, ஆளுநர் நுழைவாயில் முகப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இணைப்புகளை வழங்கி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.