தாம்பரம்: தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் தாலுகா அரசு மருத்துவமனையை செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி 2021-ம் ஆண்டு அனுமதி வழங்கியதோடு, ரூபாய் 110 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது.
மேலும் தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் தேசிய சித்த மருத்துவமனை வளாகம் அருகே உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு நிலம் சுத்தம் செய்யப்பட்டு மருத்துவமனை கட்டிடப் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
6 தளங்கள் கொண்ட 400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வந்த இந்த மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்த வைக்கும் நிகழ்ச்சி இன்று ( ஆக.9) நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூபாய் 115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம், ரூ. 7.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை – புறநகர் பிரிவு, ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டடம் மற்றும் 3 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எம்.பி, டி.ஆர்.பாலு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு ஆட்சியர் தி. சினேகா மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
புதிய மாவட்ட மருத்துவமனை 6 மாடி கொண்டது. இக்கட்டடத்தில், 4 அறுவை சிகிச்சை அரங்கம், 3 அவசர அறுவை சிகிச்சை அரங்கம், 111 தீவிர சிகிச்சை படுக்கை, 289 படுக்கை கொண்ட பொதுப் பிரிவு என, 400 படுக்கை வசதிகள் உள்ளன.
இந்த மருத்துவமனையில் தரைத்தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே, சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன், மருந்தகம், புற நோயாளி பிரிவு. முதல் தளத்தில் அவசர அறுவை சிகிச்சை அரங்கம், நம்பிக்கை மையம், குடும்ப நலப் பிரிவு, கர்ப்பிணிகளுக்கான புறநோயாளிகள் பிரிவு, கால் போஸ் கோபி உள்ளிட்டவையும். 2வது தளத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ அறை, மகப்பேறு உயர் தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு அறுவை அரங்கம், பிரசவ முன் கவனிப்பு அறை, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு.
3-வது தளத்தில் பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, நீரிழிவு பிரிவு, ரத்த வங்கி, பிரசவ பின் கவனிப்பு பிரிவு, குடும்ப நல அறுவை சிகிச்சை பிரிவு. 4வது தளத்தில் ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, பெண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, தீக்காயப்பிரிவு ஆய்வகம்.
5வது தளத்தில் அவசர அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு, உயர் சார்பு அலகு பிரிவு, பொது சிகிச்சை பிரிவு. 6வது தளத்தில் குழந்தைகள் பொது பிரிவு, ஆண்கள் பொது பிரிவு, பெண்கள் பொது பிரிவு என மொத்தம் ஆறு தளத்தில் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பாக தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக திறக்கப்படும் இந்த மருத்துவமனையால் தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதி மக்கள் பயனடையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் விபத்துகளில் சிக்குபவர்கள் மேல் சிகிச்சைக்கு சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது அதிநவீன கருவிகளுடன் அனைத்து சிகிச்சைகளும் புதிய மருத்துவமனையில் வழங்கப்பட உள்ளதால் விபத்து உயிரிழப்புகள் பெருமளவு குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.