சென்னை: உலக அளவில் காவல் துறையினருக்கான விளையாட்டு போட்டியில் 50 பதக்கங்கள் பெற்று தமிழக காவல்துறை அணி பெருமை சேர்த்துள்ளது. அந்த அணியினரை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
உலக அளவில் காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான விளையாட்டு போட்டிகள் (2025), அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் இந்த மாதம் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு அணி சார்பாக தமிழக காவல் துறையிலிருந்து காவலர்கள் தினேஷ், அர்ஜூன் மற்றும் ஹரிகிருஷ்ணன், பெண் காவலர்கள் இளவரசி மற்றும் சரண்யா பங்கேற்று முறையே 3- தங்கம், 4 வெள்ளி மற்றும் 4-வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளனர்.
மேலும், 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் எஸ்பி மயில்வாகனன் உடன் 6-ஆய்வாளர்கள், 1-சார்பு ஆய்வாளர், 1-சிறப்பு சார்பு ஆய்வாளர், 4-தலைமை காவலர் மற்றும் 3-பெண் தலைமை காவலர் ஆகியோர் பங்குப்பெற்று முறையே 19-தங்கம், 11-வெள்ளி மற்றும் 9-வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று தமிழகத்துக்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இதையடுத்து, வெற்றி பெற்று பதக்கம் வென்ற தமிழக காவல் துறை அணியினர் அனைவரையும் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று நேரில் அழைத்து பாராட்டினார். உடன் ஐஜிக்கள் விஜய குமாரி (ஆயுதப்படை), பிரவீன் குமார் அபினபு (பொது) உடனிருந்தனர்.