சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று தர்ணா நடைபெற்றது. திமுக தேர்தல் வாக்குறுதிப்படி 2013-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு-வின் போக்குவரத்து மற்றும் ஓய்வூதியர் நலப் பிரிவு சார்பாக தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதன் பகுதியாக சென்னை, பல்லவன் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், பொருளாளர் சசிகுமார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வி.தயானந்தம், தலைவர் ஆர்.துரை, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலத் தலைவர் எம்.சந்திரன், பொருளாளர் ஆதிமூலம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் தயானந்தம் கூறியதாவது: ஓய்வு பெற்றோர் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, பஞ்சப்படி உயர்வு, ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் போன்ற திமுக தேர்தல் வாக்குறுதியை 4 ஆண்டுகள் கடந்தும் முதல்வர் நிறைவேற்றவில்லை.
2023-ம் ஆண்டு ஜூலைமாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 கோடி வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்றோருக்கான கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் ஆக.5, 6, 7 தேதிகளில் தருமபுரியில் நடைபெற உள்ள மாநில சம்மேளனம் மாநாட்டில் அடுத்தகட்ட போராட்டம் குறித்த முடிவை அறிவிப்போம் என்றார்.