சென்னை:‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பில், அடுத்த 30 நாட்களில் திமுகவில் 2.50 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பில் ஆளும் திமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
1.35 கோடி உறுப்பினர்கள் சேர்ப்பு: அதன்படி, தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக மாற்றும் பணி திமுக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, 68 ஆயிரம் டிஜிட்டல் ஏஜென்ட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பணியை கடந்த ஜூலை 3-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் தற்போது வரை 1.35 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக திமுகவின்சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்கள் வரவேற்பதில் மகிழ்ச்சி: இந்நிலையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை தீவிரப்படுத்தும் வகையில், மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்கவும், திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, தமிழக மக்களை ஓரணியில் கொண்டுவர வீடுவீடாகப் பரப்புரை மேற்கொள்ளவும், திமுகவில் அவர்களை உறுப்பினர்களாக்கவும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை கடந்த 3-ம் தேதி தொடங்கினோம்.
செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும்போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு திமுக உடன்பிறப்புக்கும் என் தலைதாழ்ந்த வணக்கம். நன்றி. நமக்கு இன்னமும் 30 நாட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நம் கழகத்தினர் கலந்துரையாடுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.
முன்னெடுப்பின் நோக்கம்: மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழகத்துக்கு இழைத்துள்ள, இழைக்கவுள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்துச் சொல்வதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கம். அடுத்த 30 நாட்களில் தமிழகத்தில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்.
நாம் உருவாக்கியிருக்கும் பூத் டிஜிட்டல் ஏஜென்ட்கள் கழகத்துக்கு மிகப்பெரிய சொத்து. அவர்களை எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், தேர்தலைக் கடந்தும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. எந்தெந்த வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறையை சரியாகக் கடைபிடிக்கவில்லையோ அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.