சென்னை: தமிழகத்துக்கு 16-வது நிதிக் குழுவின்கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் மத்திய மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் மற்றும் இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் தலைமையில் மாநில மின்துறை அமைச்சர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேசியதாவது: தமிழக எரிசக்தித் துறை பல முக்கிய சாதனைகளையும் சீர்திருத்த முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் மின் உற்பத்தி, தொடரமைப்பு மற்றும் பகிர்மானத்துக்காக ரூ.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட முதலீடு தேவைப்படுகிறது, இதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் புதிய விரிவான கடன் மறுசீரமைப்பு திட்டம் கொண்டு வர வேண்டும். 16-வது நிதிக் குழுவின்கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
மேலும் சூரிய மேற்கூரை மின்சக்திக்கான நெட் மீட்டரிங் முறையை நெட் ஃபீட்-இன் முறையாக மாற்ற வேண்டும். மின்சாரக் கட்டணக் கடன்கள் ஐபிசி தீர்வு முறையில் முன்னுரிமை பெற வேண்டும். ரிசர்வ் வங்கி கடன் காலத்தை சொத்து ஆயுள் உடன் பொருந்துமாறு நீட்டிக்க அனுமதிக்க வேண்டும். வெளி கடன் வரம்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடியாக உயர்த்த வேண்டும்.