சென்னை: ஜூன் 21-ம் தேதி அன்று, 11-வது சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட ஆன்லைன் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 11-வது சர்வதேச யோகா தினத்தை யொட்டி உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஒன்றிணைக்கும் யோகாவை அனைவரும் பயிற்சி செய்யுமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா” என்பதாகும். தனிநபர் நல்வாழ்வுக்கும், நமது ஆரோக்கியத்துக்கும் இடையிலான முக்கிய தொடர்பை இது எடுத்துக் காட்டுகிறது. அனைவரும் தங்கள் அன்றாட வாழ்வில்யோகா செய்து தனிப்பட்ட ஆரோக்கியத்தை வளர்க்கவும், இணக்கமான சமூகத்தை உருவாக்கவும் ஆளுநர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இணையவழி சான்றிதழ்: ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்வதேச யோகா தினத்தையொட்டி நிறுவனங்கள், மையங்கள், அமைப்புகள், நிர்வாகதுறைகள், கிராமங்கள், வேளாண் அறிவியல் மையங்கள், விவசாயிகள், மீனவர்கள், கைவினைக் கலைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் ஒரு பிரத்யேக இணையவழி ( சேவையை தொடங்கியுள்ளது.
இதில், யோகா பயிற்சி மையங்களாக பணியாற்ற விரும்பும் மையங்கள், நிறுவனங்கள், அமைப்புகள், துறைகள் ஆன்லைனில் பதிவு செய்துக் கொள்ளலாம். தனிப்பட்ட யோகா ஆர்வலர்கள் ஆன்லைனில் பதிவு செய்து சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். பங்கேற்கும் மையங்களில் ஜூன் 21-ம் தேதி அன்று யோகா பயிற்சி செய்யும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் வழங்கப்படும்.
ஆளுநரின் பாராட்டு: ஜூன் 21 யோகா நிகழ்வுக்குப் பிறகு, மையங்கள் தங்கள் இடங்களில் நடத்தப்பட்ட யோகா செயல் விளக்கங்களின் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகளையும் சுருக்கமான விளக்கத்தையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம். சிறப்பாகச் செயல்படும் மையங்கள், நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆளுநரால் பாராட்டப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு 70102 57955, 044-22357343, 22351313 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.