சென்னை: நூறாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் காந்திய போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவரும், காந்திய போராளியுமான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் நேற்று 100-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதை யொட்டி அவருக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கமல் ஹாசன் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: காந்தியம் என்னும் கருத்தாக்கத்துக்கு உருவமாய் இன்று நம் கண்முன் நிற்கும் பெருந்தகையாளர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். சட்டரீதியான போராட்டங்களால், செயல்பாடுகளால் லட்சக்கணக்கான எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் பெற்றுத் தந்த காந்தியர்.
வாழ்வு, சேவை என்பவை இருவேறு விஷயங்கள் என்றில்லாமல், வாழ்வே சேவை என்று வாழும் அம்மையார் கிருஷ்ணம்மாளின் வயதில் ஜூன் 16 (நேற்று) நூறாவது ஆண்டு தொடங்குகிறது. அவரை வணங்கி வாழ்த்துவது என் கடமை. ‘இன்னுமொரு நூற்றாண்டு இரும்’ என்னும் சம்பிரதாய வாழ்த்துச் சொல் இவருக்கே பொருந்தும். வாழ்க பல்லாண்டு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.