ஆண்டிபட்டி: வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் உபரிநீரை வெளியேற்றாமல் நீர்மட்டத்தை 71 அடி வரை உயர்த்த நீர்வளத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
வைகை அணைக்கு கடந்த சில வாரங்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் இங்கு அதிகளவில் சேகரமாகி வருகிறது. இதனால் ஜூலை 20-ம் தேதி 63.77அடியாக இருந்த நீர்மட்டம் (மொத்த உயரம் 71) படிப்படியாக அதிகரித்து 26-ம் தேதி 66 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நீர்மட்டம் 68.5 அடியாக உயர்ந்ததால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 726 கனஅடியாக இருந்த நிலையில் 569 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வரத்தை விட குறைவான நீரே வெளியேற்றப்பட்டதால் இன்று (ஆக.5) மதியம் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. நீர்தேக்க அளவு 71 அடியாக இருந்தாலும் மழைக் காலங்கள், நீர்வரத்து அதிகம் உள்ள நேரங்களில் பாதுகாப்பு கருதி 69 அடியிலே மூன்றாம் கட்ட எச்சரிக்கை வெளியிடப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுவது வழக்கம்.
இதன்படி நேற்று மூன்றாம் கட்ட அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. இருப்பினும் உபரி நீர் வெளியேற்றப்படவில்லை. நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், மழைக் காலங்களில் அணையின் பாதுகாப்பு கருதி 69 அடியிலே நீர் வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்துள்ளது. நீர்வரத்தும் சீராக உள்ளது. ஆகவே வழக்கமாக மூன்றாம் கட்ட எச்சரிக்கைக்கு பிறகான உபரிநீர் வெளியேற்றப்படவில்லை.
தொடர்ந்து 71 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் 5 மாவட்டத்தைச் சேர்ந்த கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.