ஆண்டிபட்டி: வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப் பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கும் நிலை உள்ளதால் நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. தற்போது கேரள, தமிழக எல்லையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மூல வைகையில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் விநாடிக்கு 1,867 கனஅடி நீர் கடந்த 20-ம் தேதி முதல் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் வைகை அணைக்கான நீர் வரத்து அதிகரித்தபடி இருந்தது. இந்நிலையில் ஜூலை 20-ம் தேதி 63.77 அடியாக இருந்த நீர்மட்டம் (மொத்த உயரம் 71) படிப்படியாக அதிகரித்து 26-ம் தேதி 66 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியில் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போகம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 769 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் நீர்வரத்தினால் அணையின் நீர்மட்டம் இன்று (ஆக.4) 68.50 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 69 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்ததும் மூன்றாம் கட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”தற்போது விநாடிக்கு ஆயிரத்து 594 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விரைவில் 69 அடியை எட்டிவிடும். இருப்பினும் நீர்வரத்துக்கு ஏற்ப நீர்மட்டத்தை 69 அல்லது 71 அடியில் நிலை நிறுத்தப்படும். இந்நிலையில் மூன்றாம் கட்ட அபாய எச்சரிக்கைக்குப் பிறகு எந்த நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால் 5 மாவட்டத்தின் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று அதிகாரிகள் கூறினர்.