சென்னை: தெற்கு ரயில்வேயிடம் இருக்கும் கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க கொள்கைரீதியிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் அளித்துள்ளது.
சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தில் தற்போது, தினமும் 100 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேளச்சேரியையும் – பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப்பணி கடந்த 2008-ல் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த பணிகள், தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் இத்தடத்தில் உள்ள குறிப்பிட்ட சில நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, தெற்கு ரயில்வேயுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்முடிவில், தெற்கு ரயில்வே தரப்பில் ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், அனுமதி கிடைக்காததால், இந்த முயற்சி கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் ரயில்வே வாரியம் கடந்த 30-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. இக்கூட்டத்தில், கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க கொள்கைரீதியிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் அளித்துள்ளது.