வேலூரில் ரூ.197.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 9 ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்தார்.
வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.197.81 கோடி மதிப்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் தரைதளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய மருத்துவமனையில் 560 படுக்கைகள், 11 அறுவை சிகிச்சை அரங்குகள் உட்பட உயர்சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 9 ஆரம்ப, துணை சுகாதார நிலைய கட்டிடங்களையும் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், மக்களவை உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டி.எம்.கதிர்ஆனந்த் (வேலூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), ப.கார்த்திகேயன் (வேலூர்), அமலுவிஜயன் (குடியாத்தம்), ஜே.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார், வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் ‘ரோடுஷோ’: வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் 2 நாள் அரசுமுறை பயணமாக ரயில் மூலம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். சாலையோரங்களில் திமுகவினர் மேடை அமைத்து பல்வேறு கலை நிகழ்சசிகள் மூலம் வரவேற்றனர். வேலூர் அண்ணா சாலையில் மாநகர திமுகவினர் சாலையை ஆக்கிரமித்து மேடை அமைத்து இசை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளித்தனர். முன்னதாக, வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வேனில் இருந்து இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடுஷோவில் ஈடுபட்டார். பேருந்துக்காக காத்திருந்த மக்களைப் பார்த்து கையசத்தபடி சென்றார். நேஷனல் சந்திப்பு வரை முதலமைச்சர் ரோடுஷோவில் ஈடுபட்டார். பின்னர், வேன்மூலம் மருத்துவமனை நோக்கி புறப்பட்டவர் பில்டர்பெட் சாலை சந்திப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை சந்தித்து வாழ்த்து பெற்ற முதலமைச்சர் அவர்களுக்கு சாக்லேட்டுகளை கொடுத்து மகிழ்ந்தார்.
திமுக பிரமுகர் வீட்டுக்கு திடீர் விசிட்: வேலூர் மாவட்ட அவைத்தலைவரும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான முகமது சகியின் சகோதரர் முகமது சாதிக். வேலூர் மாநகராட்சியின் முதல் துணை மேயராக இருந்தவர். இவர் கடந்த மாதம் சாலை விபத்தில் இறந்தார். அவரது வீட்டுக்கு திடீரென சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முகமது சாதிக்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
திமுக பிரமுகரிடம் திருட்டு முயற்சி: காட்பாடி தாராபடவேடு பகுதியில் முதலமைச்சரை வரவேற்க திமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அங்கு திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன் பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் நோட்டு கட்டு ஒன்றை மர்ம நபர் திருடியுள்ளார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்தபோது ரூபாய் நோட்டு கட்டை அவர் தூக்கி மக்கள் கூட்டத்தில் வீசியுள்ளார். காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை சிலர் எடுத்த நிலையில் மீதம் இருந்த பணத்தை பூஞ்சோலை சீனிவாசன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணத்தை திருடிய மர்ம நபரை திமுகவினர் சரமாரியாக அடித்து உதைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் ஏற்கெனவே 4-க்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்ததால் முதலமைச்சர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் திருடப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.