திருநெல்வேலி: விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காட்டுப் பன்றிகள் சுட்டுப் பிடிக்கப்படும் என்று மாநில வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, அப்பர் கோதையார் பகுதிகளை உள்ளடக்கிய களக்காடு வனச்சரகப் பகுதியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளுக்கு காட்டு பன்றிகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை தடுப்பதற்கு, காட்டுப் பன்றிகளை சுட்டு பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக வனத்துறை அலுவலகத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் காட்டுப் பன்றிகளை சுட்டு பிடிக்கப்படும். குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டு யானை வருவதை தடுப்பதற்கு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வனப்பகுதியை 21.76 சதவீதமாக உயர்த்தியிருக்கிறோம். இன்னும் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டில் வனப்பகுதி 33 சதவீதமாக உயர்த்தப்படும்.
தமிழ்நாட்டில் வனக் கல்லூரி கோவையில் உள்ளது. தென்பகுதியில் வனக் கல்லூரி அமைப்பதற்கு தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பல்லூயிர் வன உயிரின புங்கா 1,500 ஏக்கர் பரப்பளில் ஆசியாவிலையே பெரியதாக சென்னை வண்டலூரில் உள்ளது. இதுபோல் பல்லூயிர் வன உயிரின புங்கா வேலூரிலும் அமைந்துள்ளது.
தென் தமிழக மக்களுக்காக திருச்சியில் பல்லூயிர் வன உயிரின புங்கா 420 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறையில் 10 ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற வேட்டை தடுப்பு காவலர்களை நிலையான பணியாளர்களாக மாற்றும் பணி நடைபெறுகிறது. தமிழக முதல்வரின் உத்தரவிற்கு இணங்க வனத்துறையில் காலியாக உள்ள பிற பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வனவிலங்குகள் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பெரும்பாலான இடங்களில் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி அருகே யானைகள் முகாமிட்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அவற்றை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் மூலம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வன விலங்குகளா ல் எந்த வித பாதிப்பும் இல்லாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.
முன்னதாக களக்காடு வனச்சரக துணை இயக்குனர் அலுவலகத்தில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஊழியர்களுடன் வனப்பகுதியை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில், களக்காடு சரணாலயம் துணை இயக்குநர் ராமேஸ்வரன், களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஸ், துணை தலைவர் பி.சி.ராஜன், களக்காடு வனச்சரக அலுவலர் பிரபாகரன், திருக்குறுங்குடி வனச்சரக அலுவலர் யோககேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.