மதுரை: விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்லும் மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் மாநில அளவில் பள்ளிகள் இடையிலான கபடி போட்டிக்கு அழைத்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தூத்துக்குடி அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வனை கடந்த 2018-ல் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் ஆசிரியர் தமிழ்செல்வனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி 2021-ல் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ்செல்வன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு உரிய சட்டம் இயற்றவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், மாணவிகளின் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அனைத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் போது கண்டிப்பாக பெண் ஆசிரியை உடன் செல்ல வேண்டும்.
மாணவர்கள் தங்களின் பெற்றோர்களை உடன் அழைத்துச் செல்வது மற்றும் விளையாட்டு திடல், மாணவிகள் தங்கும் அறை, கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள் முழு பாதுகாப்புடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். மாணவிகள் தனியாக மறைவிடங்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது.
விளையாட்டுப் போட்டி முடிந்த பின்போ அல்லது முன்னதாகவோ வெளிப்புறங்களுக்கு செல்லும்போது உரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு மாணவிகளை அழைத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்குவதோடு, தற்காப்பு கலைகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகிறது எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி, தமிழக அரசு சமூக நீதியை கடைப்பிடித்து, மாணவிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது ஏற்கத்தக்கது அல்ல. சம்பந்தப்பட்ட மாணவி, பாலியல் தொல்லைக்குப் பின், அவரது பள்ளிப் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு, திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளார். இதனால் தான் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தமிழக அரசு மாணவிகளின் பாதுகாப்பு குறித்து உரிய சட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என விரும்பியது.
இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கிய அரசுத்தரப்பு வழக்கறிஞர்களுக்கும், தலைமைச் செயலருக்கும் பாராட்டுகள். இந்த வழக்கில் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டிருந்தது.