விருதுநகர்: வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், நிவாரண நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், ‘விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், விஜயகரிசல்குளம் கிராமத்தில் இன்று (09.08.2025) காலை 11.30 மணியளவில் தனியார் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மேற்படி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (வயது 65) க/பெ.பாண்டியதேவர், சண்முகத்தாய் (வயது 60) க/பெ.பாண்டி மற்றும் கீழ கோதைநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (வயது 20) த/பெ.மாரீஸ்வரன் ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாரியம்மாள் (வயது 55) க/பெ.ராஜபாண்டியன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.