சென்னை: விருதுநகர் அருகே வெடிபொருள் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் நேற்று (ஜூன் 7) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் அருப்புக்கோட்டை, குல்லூர்சந்தை, தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கிலி (45) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.