சென்னை: வட சென்னை வியாசர்பாடி பகுதியில் கணேசபுரம் ரயில்வே மேம்பாலப் பணி 40 சதவீதம் மட்டுமே நிறைவடைந் திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் பதில் அளித்துள்ளது. வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே மேம்பாலப் பணி நீண்ட காலமாக முடிக்கப்படாமல் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம், சென்னை மாநகராட்சி மேயரிடம் அண்மையில் மனு அளித்திருந்தார். இதற்கு பதில் அளித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம், டி.கே.சண்முகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: கணேசபுரம் மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி முடிவுற்று. தற்போது வடக்கு பகுதியில் ஆழ்துளைக் கடைக்கால்கள் அமைக்கும் பணி, சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய்களை மாற்றியமைக்கும் பணி மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை 40 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. வடக்கு பகுதியில் நில எடுப்புக்கு பின்னரே அந்நிலத்தில், சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். எனவே, நில எடுப்பு செய்யப்பட்ட நாளிலிருந்து 6 மாத காலத்துக்குள் இம்மேம்பாலப் பணி முடிக்கப்படும்.
இவ்வாறு பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நில எடுப்பு பணிகளை எவ்வளவு துரிதப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு துரிதப்படுத்தி மேம்பாலப் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்று வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.