சென்னை: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸிடம் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினை செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபியிடமும் பேசியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன? தவெக தலைவர் விஜய் இன்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் பலர் மயக்கமடைந்தனர். விஜய் பேசிக்கொண்டிருந்த போதே மயக்கமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், விஜய் பரப்புரையில் மயக்கமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. தற்போது கரூர் அரசு மருத்துவமனையில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.