சென்னை: “தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதால், எனது வாக்குகள் குறைந்துவிடும் என்கின்றனர். ஏன் தெரியுமா? அப்படியாவது கட்சியை கலைத்துவிட்டு, ஏதோ ஒரு கட்சியில் கூட்டணி சேர்ந்துவிடுவார்கள் என்றுதான்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளுக்கு அவரவர் விரும்பிய சின்னங்கள் கிடைத்த போது 6 தேர்தலை சந்தித்த என் கட்சியை சின்னத்தை தேர்தல் ஆணையம் பறித்து, அதைக் கொண்டு கர்நாடகாவில் ஒரு கட்சிக்கு கொடுத்தது. நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ, என்ஐஏ போன்றவை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவை யாவும் அதிகாரத்தில் இருப்பவர்களின் 5 விரல்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் போட்டி. தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஒரு கூட்டணி. திமுக தலைமையில் ஒரு கூட்டணி. மோடியை முன்னிறுத்தி அண்ணாமலை தலைமையில் ஒரு கூட்டணி. நான் ஒற்றையாக நின்று 8.22 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறேன். எனில் நான் வளர்த்திருக்கின்றேன் இல்லையா? இந்தியளவில் நான் ஆட்டத்திலேயே இல்லை. ஆனால், என்னையும் தேடி வாக்கு செலுத்தி, என்னை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றியுள்ளனர்.
தேர்தலில் 1.1 வாக்கு சதவீதத்தில் இருந்து 8.22 சதவீத வாக்குகளை பெற்றிருப்பது என் வளர்ச்சியாகும். இதுபோன்று வளர்ந்து வந்த கட்சி தமிழகத்தில் கிடையாது. தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதால், எனது வாக்குகள் குறைந்துவிடும் என்கின்றனர். ஏன் தெரியுமா? அப்படியாவது கட்சியை கலைத்துவிட்டு, ஏதோ ஒரு கட்சியில் கூட்டணி சேர்ந்துவிடுவார்கள் என்றுதான். செத்தாலும் நான் தனியாக தான் செல்வேன். தனித்து நின்றாலும் தனித்துவத்தோடு நிற்கவேண்டும். என் தனித்துவத்தை இழக்கமாட்டேன். நான் மக்களுக்கானவன். என் வெற்றியையும், தோல்வியையும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.