புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் விவகாரம் மீண்டும் அரசியல் விவாதமாக்கப்பட்டிக்கிறது. அத்துடன், ஆளும் என்.ஆர்.காங்கிரஸுக்கும் கூட்டணியில் உடன் இருக்கும் பாஜக-வுக்குமே சுமுகமான உறவு இல்லை என்று சொல்லப்படும் நிலையில், பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
பாஜக-வுக்கு புதுச்சேரியில் முன்பைவிட இப்போது ஆதரவு பெருகி இருப்பதாக உணர்கிறீர்களா?
புதுச்சேரி மக்கள் மத்தியில் தற்போது பாஜக-வுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் மாணவர்கள், படித்தவர்கள் மத்தியில் பாஜக மீதான பார்வை மாறியுள்ளது.
தேர்தலுக்கு தயாராகிவிட்டீர்களா… கடந்த முறையைவிட இம்முறை அதிகமான இடங்களில் போட்டியிடும் திட்டம் ஏதும் இருக்கிறதா?
பாஜக, கூட்டணி உணர்வுகளை மதிக்கும் கட்சி. 2026 சட்டப்பேரவை தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகளோடு சேர்ந்துதான் எதிர்கொள்ளப் போகிறோம். இதில் எங்களுக்கு எத்தனை சீட் கேட்பது என்பது குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும். எங்களின் தலைமை பெற்றுத்தரும் அத்தனை இடங்களிலும் நூறு சதவீதம் வெற்றிபெறுவதற்கான முயற்சிகளை நாங்கள் எடுப்போம். நிச்சயம் கடந்த முறையைவிட இம்முறை அதிகமான இடங்களில் வெற்றிபெறுவோம். இங்கு என்.ஆர்.காங்கிரஸ் தான் பெரிய கட்சி. ஆகவே, தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸைவிட, பாஜக கூடுதலான இடங்களில் வென்றாலும் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம். அதேபோல் தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரங்கசாமி இம்முறை விஜய்யுடன் கூட்டணி வைக்கும் திட்டத்தில் இருப்பதாக சொல்கிறார்களே?
முதல்வர் ரங்கசாமியுடன், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மிகுந்த நட்பு கொண்டவர். அதனால் விஜய்யும் முதல்வர் ரங்கசாமியுடன் நல்ல நட்பில் இருக்கிறார். ரங்கசாமி மிகச்சிறந்த ஆன்மிகவாதியாகவும் இருப்பதால் அவரிடம் கருத்துக் கேட்பது, நாள் குறித்து மாநாடு நடத்துவது, ஆலோசிப்பது, நலம் விசாரிப்பது விஜய்க்கு வழக்கம். இது நட்பு தான். ரங்கசாமி சாமானிய மனிதராக இருந்தாலும், யாருடன் இருந்தால் புதுச்சேரி மக்களுக்கு நல்லது செய்ய முடியும், மத்தியில் யார் ஆட்சி செய்தால் நாடு நன்றாக இருக்கும் என்பதை எல்லாம் தெரிந்த அரசியல் தீர்க்கதரிசி. ஆகவே நட்புக்கும், அரசியலுக்குமான வித்தியாசம் ரங்கசாமிக்கு தெரியும். விஜய் ஒரு நடிகர். இப்போது தான் வளர்ந்து வருகிறார். அவருடைய கட்சிக்காக அவர் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். அவருடன் கூட்டணி வைப்பதால் புதுச்சேரிக்கு நல்லது எதையும் செய்ய முடியாது.
கூட்டணி ஆட்சியில் பாஜக இருந்தும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறமுடியவில்லையே..?
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது எங்களின் கொள்கை. மாநில அந்தஸ்து கேட்பது ஏன் என்பதை தலைமையிடம் தெளிவுபடுத்தியுள்ளோம். முதல்வர் ரங்கசாமி அனைத்துக் கட்சியினரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று எங்கள் தலைமையை அணுகிக் கேட்டால், அது மாநில அந்தஸ்து பெறுவதற்கான முன்னெடுப்பாக இருக்கும் என்பதே எங்களின் விருப்பம்.
தன்னை இரண்டு அமைச்சர்கள் டார்ச்சர் செய்வதாக முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா குற்றம் சாட்டி இருக்கிறாரே?
டார்ச்சர் செய்தவர்கள் எந்த அமைச்சர்கள் என்பது நமக்குத் தெரியாது. முதல்வர் இருக்கிறார், அவர்களுடைய கட்சியின் தலைவரும் அவர் தான். ஆகவே அவரிடம் நேரடியாகச் சென்று இதுபற்றி கூறினாலே உடனடியாக பிரச்சினை முடிந்துவிடும். இதனை பொதுவெளியில் பேசி இருப்பதன் நோக்கம் கட்சியின் பெயரை கெடுப்பதற்காகவே என்று தெரிகிறது.
முதல்வருக்கும் துணைநிலை ஆளுநருக்கும் சுமுகமான உறவு இல்லாமல் இருப்பது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்காதா?
முதல்வர், துணைநிலை ஆளுநர் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர்களுக்குள் உறவு சுமுகமாகத்தான் இருக்கிறது.
புதுச்சேரியில் ஆளும் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக ஊழல் புகார்களை தெரிவித்து வருகின்றனவே?
புதுச்சேரியில் வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பான முறையில் ஏற்படுத்தப்படுகிறது. இதனால் எதிர்கட்சிகள் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. தேசிய தலைமையை குறைசொல்ல முடியாது என்பதால் பொத்தாம் பொதுவாக புதுச்சேரியில் ஆளும் அரசு மீது ஊழல் புகார் கூறி வருகின்றனர். இங்கு சின்னதாய் ஒரு தவறு நடந்தாலும் சிபிஐ விசாரணை வரைக்கும் நடத்தப்படுகிறது; தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும் செய்கிறார்கள்.
சமீபத்தில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் மத்தியில் பேசிய நீங்கள், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக ஆள்கிறது. ஆனால், கோரிமேடு எல்லையை தாண்டாத கட்சியும் இருக்கிறது” என்று என்.ஆர்.காங்கிரஸை மறைமுகமாக சாடினீர்களாமே?
கும்மிடிப்பூண்டியை தாண்டாத கட்சிகள் என தமிழ்நாட்டு கட்சிகளை குறிப்பிட்டே பேசினேன்; என்.ஆர்.காங்கிரஸை சொல்லவில்லை. அது அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி. நாங்கள் அந்த கட்சியை முன்னிறுத்தியே அரசியல் செய்கிறோம். தமிழகத்தில் மட்டும் வெற்றிபெற்றுவிட்டு பிரமருக்கும், அமித் ஷாவுக்கும் பலர் சவால் விடுகின்றனர். எம்ஜிஆர், ஜெயலிதாவை வெல்லமுடியாத திமுக-வினர், இப்போது நூற்றுக்கும் கூடுதலான இடங்களை பிடித்து ஆட்சி அமைத்துள்ளனர். பாஜக 19 மாநிலங்களில் ஆட்சிபுரிகிறது; இந்தியாவையே ஆள்கிறது. அப்படிப்பட்ட கட்சிக்கு உதயநிதி ஸ்டாலின் எல்லாம் சவால் விடுவது வேடிக்கைதான்.
புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மையா… இதில் உங்களின் நிலைப்பாடு என்ன?
மின்துறை தனியார் மயமாகிவிட்டது என்று கூறுவது புரளி. பாஜக-வை பொறுத்தவரை மின்துறையை தனியார் மயமாக்க வேண்டாம் என்பதே எங்களின் விருப்பம்.