சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (செப்.26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் பட்சத்தில், அது தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் செப்.27-ம் தேதி காலை நேரம் கரையை கடக்கக்கூடும்.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (செப்.26-ம் தேதி) முதல் அக்.1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை (செப்.26-ம் தேதி) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (செப்.27-ம் தேதி) கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.26-ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை (செப்.26-ம் தேதி) முதல் செப்.28-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடில் 6 செ.மீ மழை, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், தரங்கம்பாடி, மயிலாடுதுறையில் தலா 4 செ.மீ மழை, கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு, பேச்சிப்பாறை, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.