சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை (ஆக.12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகஸ்ட் 13-ம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். நாளையும், நாளை மறு தினமும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14 முதல் 17-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஆக.12) திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும், நாளை மறுதினம் (ஆக.13) திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில்நாளை முதல் 15-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக காரைக்காலில் 11 செமீ, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடில் 10 செமீ, பெரம்பலூர் மாவட்டம் தழுதலை, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தலா 9 செமீ, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆகிய இடங்களில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.