சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூலை 12) முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 16, 17, 18 தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் 15 முதல் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 81 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 16-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாகசென்னை சென்ட்ரலில் 7 செமீ, சென்னை கொரட்டூர், விம்கோ நகர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஆகிய இடங்களில் தலா 6 செமீ, சென்னை சோழிங்கநல்லூர், ஐஸ் ஹவுஸ், கோவை மாவட்டம் சோலையார், அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அணை, திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம், சிவகங்கை, செங்கல்பட்டு மாவட்டம் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ, சென்னை பாரிமுனை, மேடவாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.