ஸ்ரீவில்லிபுத்தூரில் 150 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கமிட்டிக்கு சொந்தமான மார்க்கெட்டை வைத்து இப்போது கிளம்பியுள்ள பிரச்சினையால் நூலகத்தின் தனித்தன்மைக்கே ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் வாசிப்பு ஆர்வலர்கள்.
1875-ல் திருநெல்வேலி ஆட்சியராக இருந்த பென்னிங்டன் என்பவரால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொது நூலகம் தொடங்கப்பட்டது. அவரது பெயராலேயே திறக்கப்பட்ட இந்த நூலகத்தின் நிர்வாகச் செலவுகளுக்காக வணிக வளாகம் ஒன்றும் பிற்பாடு கட்டப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள இந்த வணிக வளாகத்தில் காய்கறி மார்க்கெட் உட்பட 150 கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட் நகரின் மையத்தில் இருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று இடத்தில் நகராட்சி சார்பில் மார்க்கெட் வளாகம் திறக்கப்பட்டது. ஆனால், முதல்வர் கையால் திறந்து வைத்து ஓராண்டாகியும் இந்த மார்க்கெட்டுக்கு போக வியாபாரிகள் யாரும் தயாராய் இல்லை.
இந்நிலையில், பென்னிங்டன் வணிக வளாக கடைகளுக்கு வாடகையை உயர்த்துவது, வாடகை செலுத்தாத கடைகளை காலி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க பென்னிங்டன் கமிட்டி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார் நூலகத்தின் பதவி வழி தலைவரான மாவட்ட ஆட்சியர். இதில் ஏற்பட்ட பிரச்சினையால் பென்னிங்டன் கமிட்டி செயலாளர் சண்முகநாதன் உள்ளிட்ட 7 நிர்வாகிகள் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து 14 பேர் கொண்ட புதிய கமிட்டி ஒன்றை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். ஆனால், இந்தக் கமிட்டியை புறந்தள்ளிவிட்டு ராதாசங்கர் என்பவரை தலைவராகவும் முத்துப்பட்டர் என்பவரை துணைத் தலைவராகவும் போட்டு 11 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றுக் கொண்டது. அத்துடன், பென்னிங்டன் கமிட்டி நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட முடியாது என்று சொல்லி உயர் நீதிமன்றத்தை நாடிய புதிய நிர்வாகக் குழு, ஆட்சியரின் பரிந்துரைக்கு தடையாணையும் பெற்றது.
இதையடுத்து, தனது ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக கிளம்பி வந்த முந்தைய செயலாளர் சண்முகநாதன், புதிய நிர்வாகிகளான ராதாசங்கர், முத்துப்பட்டர் மீது போலீஸில் புகாரளித்தார். இந்த நிலையில், மிகப் பழமையான மார்க்கெட் கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்திருப்பதாகச் சொல்லி அதை இடிக்க உத்தரவிட்டார் சார் ஆட்சியர். பென்னிங்டன் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் இதற்கும், கமிட்டியின் 20 ஆண்டு கணக்குகளை வெள்ளை அறிக்கையாக கேட்ட ஆட்சியரின் கடிதத்திற்கும் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர்.
இதனிடையே பென்னிங்டன் கமிட்டிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எழுதிய கடிதத்தில், ‘பென்னிங்டன் கமிட்டி நிர்வாகத்தின் வெளிப்படை தன்மை மற்றும் கமிட்டியின் நோக்கம் சிதையாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு கமிட்டியின் பதவி வழி தலைவரான மாவட்ட ஆட்சியருக்கு இருப்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
சமீப காலமாக நிர்வாக கமிட்டியில் நிர்வாகிகளுக்குள் ஏற்பட்டு வரும் பிரச்சினைகளால் கமிட்டிக்கும், அதன் தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியருக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால் கமிட்டியின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டியது அவசியமாகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பென்னிங்டன் கமிட்டி நிர்வாகிகள் சிலர், “பென்னிங்டன் கமிட்டியை கைப்பற்ற நகராட்சி தரப்பில் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் நீதிமன்றத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் அதுபோல கைப்பற்றவே தேவையற்ற நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறோம்” என்றனர்.
உயரிய நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட பென்னிங்டன் நூலகத்துக்கும் அது சார்ந்த கமிட்டிக்கும் கோடிக் கணக்கில் இப்போது சொத்து இருக்கிறது. அதை வைத்து நூலகத்தை மேம்படுத்தும் வேலைகளை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நூலகம் அரசியல்வாதிகளின் கைகளுக்குள் போய்விடக் கூடாது என்பதே வாசிப்பு நேசர்களின் ஒரே கவலையாக இருக்கிறது.