சென்னை: சென்னையில் மறுசீரமைப்புக்குப் பிறகு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 4,071 ஆக உயர்ந்துள்ளதாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் அதை பிரித்து வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒரு கட்சிக்கு 2 பிரதிநிதிகள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளாக திமுக சார்பில் சட்டத்துறை துணை செயலாளர் சந்துரு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்கா, பாஜக சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், கவுன்சிலர் உமா ஆனந்த், காங்கிரஸ் கட்சி சார்பில் சூரிய பிரகாசம், நவாஷ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் உசேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், எஸ்.குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, கட்சி பிரதிநிதிகளுக்கு சென்னையில் மறுசீரமைக்கப்பட்ட புதிய வாக்குச்சாவடிகளின் விவரங்கள் குறித்து விளக்கமளித்தார்.
அதன்படி சென்னையில் உள்ள 3,718 வாக்குச்சாவடிகளில் 1,200-க்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டு வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, புதிதாக 353 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, 4,071 ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையொட்டி கட்டிட மாற்றம், பெயர் மாற்றம், வாக்குச்சாவடிகள் இணைப்பு மற்றும் வாக்குச்சாவடிகள் பிரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ம.பிரதிவிராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜி.சரவணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 2025 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி சென்னையில் மொத்தம் 40.15 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும், அதில் 19.70 லட்சம் ஆண்களும், 20.44 லட்சம் பெண்களும், 1,276 இதர வாக்காளர்களும் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் 10,736 மாற்றுத் திறனாளி வாக்காளர்களும், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 81,047 வாக்காளர்களும், 564 வாக்காளர்கள் ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.