சென்னை: சென்னையில் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றாத கட்டிடங்களுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், போப் பிரான்சிஸ் மறைவுக்கும், காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலா பயணிகளுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், உறுப்பினர்கள் பேசினர். அதன் விவரம்:
நிலைக்குழு தலைவர் இளைய அருணா: எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யப்படும் வேலைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல, மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து செய்யப்படும் வேலைகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும்.
மேயர் பிரியா: இதுதொடர்பாக அடுத்த மன்ற கூட்டத்துக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும்.
திமுக உறுப்பினர் க.வி.நாகவள்ளி (88-வது வார்டு): சென்னை மாநகராட்சி முழுவதுமே தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.
மேயர்: சென்னையில் 2024-25-ம் ஆண்டில் 26,760 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. தற்போது 16 நாய் பிடிப்பு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த ஆண்டு 11 வாகனங்கள் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு, தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்படும். 2025-26-ம் நிதி ஆண்டில் 1.80 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநோய் கடி தடுப்பூசி, அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
அதிமுக உறுப்பினர் கே.ஆர்.கதிர்முருகன் (170-வது வார்டு): குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்பு சான்றிதழில் பெற்றோர் பெயர், முகவரி ஆகியவை எழுத்து பிழையுடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அதை முறைப்படுத்த வேண்டும்.
மேயர்: மாநகராட்சி மூலம் நடத்தப்படும் மருத்துவ முகாம்களுடன், பிறப்பு சான்றிதழில் பிழைகளை சரிசெய்யும் முகாமும் இணைந்து நடத்த ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு மேயர் பதில் அளித்தார்.
இதையடுத்து, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுத்தமான, பாதுகாப்பான கட்டுமானங்களை உறுதிசெய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வழிகாட்டுதல்களை பின்பற்றாத கட்டிடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000-ல் இருந்து அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போரூரில் ரூ.1.35 கோடியில் மீன் அங்காடி கட்டும் பணிக்கான திட்ட மதிப்பீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் நாய்களுக்கு பொருத்தக்கூடிய 2 லட்சம் மைக்ரோசிப்களை கொள்முதல் செய்யவும் நிதி ஒதுக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
பொது வருங்கால வைப்புநிதியில் கடந்த ஏப்.1 முதல் வரும் ஜூன் 30-ம் தேதி வரை உள்ள காலத்துக்கு வட்டி விகிதம் 7.1 சதவீதம் என நிர்ணயித்து வெளியிடப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் நீர்வழி கால்வாய்களை சீரமைக்கும் பணிக்கு ரூ.95 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கைக்கு நிர்வாக அனுமதி பெறுவதற்கு குடிநீர் வழங்கல் துறைக்கு கடிதம் அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது.
மாநகராட்சி பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் 141 உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த, மாத ஊதியத்துக்கான ரூ.2.34 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 50 டன் கொள்ளளவில் காற்று புகும் வகையில் பதனம் செய்யும் உரம் தயாரிக்கும் 2 கூடங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
தியாகராய நகர் உஸ்மான் சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு, தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ மறைந்த ஜெ.அன்பழகன் பெயரை சூட்டுவதற்கும், நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் கார்ல் மார்க்ஸ் சிலை அமைக்க தடையில்லா சான்று வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் 3,800 சதுரஅடி பரப்பளவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு தூண் அமைக்க உரிய நிலம் ஒதுக்கி முன் நுழைவு அனுமதியும் வழங்கப்பட்டது. அந்த வகையில், முதல்முறையாக மாமன்ற கூட்டத்தில் மொத்தம் 237 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.