சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள், தூய்மைப் பணியாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், பெண் வழக்கறிஞர்களிடம் காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமித்து, நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டது.
ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நீக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் மற்றும் பெரியமேடு காவல் ஆய்வாளர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் சௌந்தர் அடங்கிய அமர்வு, ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும், பிரதான வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது.