சென்னை: வலிமையான ராணுவமே நாட்டின் பாதுகாப்பு, பெருமைக்கு அடிப்படை என்று ராணுவ அதிகாரிகளுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். புயல், மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகளின்போது மேற்கொள்ளும் மீட்பு, நிவாரண பணிகள் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இந்திய ராணுவ தென் பிராந்திய பகுதியின் அசாதாரண பங்களிப்பை பாராட்டி, நன்றி தெரிவிக்கும் விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இதில், ராணுவத்தின் 16 மெட்ராஸ் (திருவாங்கூர்), 35 ஃபீல்ட் படைப்பிரிவு, ஆவடி ஆயுத தொழிற்சாலை, 65 கம்பெனி ராணுவ சேவை படை (விநியோகம்) ஆகிய 4 பிரிவுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் அவர் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவத்தின் வலிமை, ஒற்றுமை, அர்ப்பணிப்பு உணர்வு வெளிப்பட்டது. ராணுவம் பலவீனமாக இருந்தால் நட்பு நாடுகள்கூட எதிரியாக பார்க்கும். வலிமையான ராணுவமே நாட்டின் பாதுகாப்பு, பெருமைக்கு அடிப்படை.
அந்த வலிமைதான் மரியாதையை உருவாக்கும். அது சமாதானத்தையும் கொண்டுவரும். ராணுவத்தில் மன உறுதி, தொழில்நுட்ப திறன் மிக முக்கியம். இத்தகைய பாராட்டு விழா மூலம் ராணுவத்தினரின் தியாகம், வீரத்தை பாராட்டுகிறோம். பொதுமக்கள் – ராணுவத்தினர் இடையிலான உறவு மிகவும் உணர்வுப்பூர்வமானது. அதை நேரிலேயே பார்த்துள்ளேன்.
இமாலயத்தின் பனிச்சரிவுகள், வடகிழக்கு மலைப் பகுதிகள், ராஜஸ்தானின் வறண்ட பாலைவனம் என எங்கிருந்தாலும் ஒரே நோக்கத்துக்காக பணியாற்றி வருகிறது நமது ராணுவம். ‘கார்கில் விஜய் திவஸ்’ (வெற்றி தினம்) 26-ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. கார்கில் போர் வெற்றி வெறும் ராணுவ வெற்றியாக இல்லாமல், நம் தேசத்தின் ஒற்றுமை, உறுதிக்கான சான்றாக அமைந்தது.
இந்தியாவில் பல மொழி, மதம், கலாச்சாரம் இருந்தாலும், தேசபக்திக்கு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறது நமது ராணுவம். அது ஒரு குடும்பம்போல உள்ளது. உலகின் முன்னேற்றத்துக்கு ஏற்ப, இந்திய ராணுவமும் வளர வேண்டும். இவ்வாறு பேசினார். தென் பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார், ஆளுநரின் செயலர் கிர்லோஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.