சென்னை: வண்டலூர் – மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான 60 கி.மீ நீள சென்னை வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. மக்களின் வரிப் பணத்தில் கட்டப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கும் விற்பனை செய்து, அதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனங்கள் மக்களிடம் சுங்கக் கட்டணம் வசூலித்து சுரண்ட அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னையைக் கடந்து மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் சென்னை மாநகருக்குள் வருவதைத் தவிர்க்கும் வகையில் சென்னை வண்டலூரில் தொடங்கி நெமிலிச்சேரி வழியாக மீஞ்சூர் வரை மொத்தம் 60.15 கி.மீ தொலைவுக்கான வெளிவட்டப் பாதை கடந்த ஆட்சியில் ரூ.2,156.40 கோடி செலவில் இரு கட்டங்களாக அமைக்கப்பட்டது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கும் இந்த சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி, இந்தச் சாலையை ஒப்பந்தப் புள்ளிகள் வாயிலாக ஏலத்தில் எடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க உரிமம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வண்டலூர் – மீஞ்சூர் இடையிலான சென்னை வெளிவட்டச் சாலை முழுவதும் மக்கள் வரிப் பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் அது மக்களின் சொத்து. அதைப் பயன்படுத்திக் கொள்ள மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அச்சாலையில் மாநில அரசின் நிறுவனமான தமிழ்நாடு மாநில சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கே கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இத்தகைய சூழலில் இந்தச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய துடிப்பது நியாயமற்றது.
மத்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்து ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்டும் திட்டத்தை 2021-ம் ஆகஸ்ட் 23-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘நம் நாட்டினுடைய பொதுத் துறை நிறுவனங்கள் நம் அனைவரின் பொதுச் சொத்தாகும். லாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், மக்கள் நலன் கருதி இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல என்பது நம்முடையக் கருத்து.
பொதுச் சொத்துகளை தனியார் மயமாக்குவதற்கு நம்முடையை எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பிரதமருக்கு கடிதம் எழுதவிருக்கிறேன் என்பதை அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். ஆனால், இப்போது அதற்கு முற்றிலும் மாறாக தமிழ்நாட்டு மக்களுக்கு சொந்தமான சொத்துகளைத் தனியாருக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.
மத்திய அரசின் சொத்துகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின், மாநில சொத்துகளை மட்டும் தனியாருக்கு மலிவு விலையில் விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்? சமூக நீதி, மக்கள் நலன் உள்ளிட்ட எந்த சிக்கலாக இருந்தாலும் திமுக சொல்வதும், செய்வதும் வெவ்வேறானவை தான்; எந்த சிக்கலாக இருந்தாலும் இரட்டை வேடம் போடுவது தான் திமுகவின் இயல்பு என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது.
வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் இன்றைய நிலையில் சராசரியாக தினமும் 31 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன. குறைந்த பட்சமாக மகிழுந்துகளுக்கு ரூ.140 முதல் அதிகபட்சமாக 7 அச்சு சரக்கு வாகனங்களுக்கு ரூ.895 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப் படுகிறது. சராசரியாக ஓரு வாகனத்திற்கு ரூ.300 என வைத்துக் கொண்டாலும் கூட ஆண்டுக்கு சுமார் ரூ.350 கோடி சுங்கக்கட்டணம் வசூலாகும்.
25 ஆண்டுகளின் முடிவில் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 70 ஆயிரங்களை கடந்து விடும் என்பதால் சுங்கக்கட்டண வசூலும் ஆண்டுக்கு ரூ.3,500 என்ற அளவைத் தாண்டி விடும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த சாலையிலிருந்து 25 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.45 ஆயிரம் கோடி வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க முடியும்.
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையை வெறும் ரூ.2,000 கோடிக்கு தனியாருக்கு தாரை வார்ப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இதன் பின்னணியில் என்ன பேரம் நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டாலே, மக்களின் வரிப் பணத்தில் அமைக்கப்பட்ட வெளிவட்டச் சாலையை தனியாருக்கு தாரை வார்க்க திமுக துடிப்பது ஏன் என்பதை புரிந்து கொள்ளலாம்.
மக்களின் வரிப் பணத்தில் கட்டப்பட்ட கட்டமைப்புகள் மக்களின் சொத்துகளாகவே நீடிக்க வேண்டும். எனவே, வண்டலூர் – மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்; இந்த சாலையில் கட்டணம் வசூலிப் பதையும் நிறுத்த வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.