திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.370 கோடியில் 33 கி.மீ. தூரத்துக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘திருநெல்வேலியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று, திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தின்படி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாழையூத்து அருகே தொடங்கும் மேற்கு புறவழிச்சாலை, சங்கரன் கோவில் சாலை, தென்காசி சாலை, முக்கூடல் சாலை, அம்பாசமுத்திரம் சாலை மற்றும் கன்னியாகுமரி சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் ரூ.370 கோடி திட்ட மதிப்பீட்டில் 33 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலையாக அமைக்கப்படவுள்ளது.
நாகர்கோவில் சாலையில் ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக் அருகே கொங்கந்தான் பாறை விலக்கு, தருவை, கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, திருப்பணி கரிசல்குளம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ராமையன்பட்டி, சத்திரம்புதுக்குளம், தாழையூத்து பகுதிகளை இணைக்கும் வகையில் இச்சாலை அமைகிறது. இந்த சாலை அமைக்க திட்டமிட்டுள்ள பகுதிகளில் முதற்கட்டமாக நில ஆர்ஜிதம் முழுமையாக முடிவடைந்த பகுதிகளில் பணிகள் தொடங்கியுள்ளன.
முதற்கட்டமாக நாகர்கோவில் சாலையில் கொங்கந்தான்பாறை விலக்கு அருகே ஜோதிபுரத்தில் தொடங்கி தருவை, சுத்தமல்லி வரை 11 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க ரூ.180 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. மழைநீர் வழித்தடங்கள் உள்ள பகுதிகளில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. தொடர்ந்து, அடுத்தகட்ட பணிகளுக்கும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும். 2 ஆண்டுகளுக்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிதாக இந்த சாலை அமைப்பதால் தென்காசி, கடையம், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில் சாலைகளிலும், திருநெல்வேலி மாநகரிலும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாலை அமையும் புறநகர் பகுதிகளில் புதிய தொழிற்கூடங்கள் அமைய வாய்ப்புள்ளது. இதனால், ஓரிரு ஆண்டுகளில் திருநெல்வேலி மாநகரம் தெற்கு மற்று மேற்கு பகுதிகளில் விரிவடைவதோடு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் புதுப்பொலிவு பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
திடீரென உயர்ந்த நில மதிப்பு: மேற்கு புறவழிச்சாலை பணி தொடங்கியுள்ள கொங்கந்தான்பாறை விலக்கு தொடங்கி தருவை வரையான நிலங்கள் பல ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தன. இத்திட்டப்பணி அறிவிக்கப்பட்டதும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பார்வை இப்பகுதியை நோக்கி திரும்பியது.

தற்போது, பல்வேறு பெயர்களில் இங்கு விரிவாக்கப் பகுதிகள் உருவாகியுள்ளன. கிழக்கு புறவழிச்சாலையில் நிலம் மதிப்பு சென்ட் ரூ. 6 லட்சம் வரை உயர்ந்துள்ள நிலையில், அதே அளவுக்கு இங்கும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுதவிர, ஜோதிபுரம், டக்கரம்மாள்புரம், ஆரைகுளம், மேலப்பாளையம் தெற்கு, முன்னீர்பள்ளம் தெற்கு பகுதியிலும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் நிலத்தின் வெளி மார்க்கெட் மதிப்பு கடுமையாக உயர்த்தப்படுகிறது.