சென்னை: சிஎம்டிஏ சார்பில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையம் மற்றும் பெரம்பூர் சென்னை மேல் நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளிக்கட்டிடங்களை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.17.65 கோடியில் 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.18.26 கோடி செலவில் 30 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பள்ளிக் கட்டிடம்: பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிங்காரச் சென்னை 2.0 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், ரூ.9.74 கோடி செலவில் 24 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர், வகுப்பறை, கழிப்பறை, ஆய்வுக் கூடங்களை பார்வையிட்டார். வகுப்பறையில் மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்: சிஎம்டிஏ சார்பில் கொளத்தூரில் ரூ.11.37 கோடி மதிப்பில் 29,514 சதுர அடி பரப்பில் தரை மற்றும் 4 தளங்களுடன் புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், பெரவள்ளூர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு, போக்குவரத்து காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக் கட்டிடம், கொளத்தூர், ரெட்டேரியில் ரூ.1.62 கோடியில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
சென்னை மாநகராட்சி சார்பில், கொளத்தூர் தொகுதியில் ரூ.3.27 கோடியில் பில்கிங்டன் சாலையில் அமைந்துள்ள ரயில்வே ஆன்ஸ்லே வாய்க்கால் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மற்றும் மண்டலம் 6-ல், ரூ.1.39 கோடி மதிப்பில், 69-வது வார்டு, ரங்கசாமி தெரு மற்றும் லோகோ ஸ்கீம் 1-வது பிரதான சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் 64, 65, 67, 69 ஆகிய வார்டுகளில் உள்ள 9 பூங்காக்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம் ரூ.17.65 கோடி செலவில், 14 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நலத்திட்ட உதவிகள்: கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூரில் தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் சேதமடைந்த இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக பாதிக்கப்பட்ட 3 பேருக்கு புதிய இருசக்கர வாகனங்களை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்எல் ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், வீட்டுவசதித்துறை செயலர் காகர்லா உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.