சென்னை: தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வளாகங்களில் ரூ.16.73 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன விளையாட்டு கட்டமைப்புகள், ரூ.3.68 கோடியில் ஸ்டார் அகாடமிகளை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
சென்னை நேரு விளையாட்டரங்கம் சென்னை ஒலிம்பிக் அகாடமியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார். விழாவில், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.7 கோடியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.8.25 கோடியில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை வளைகோல்பந்து மைதானம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்வதற்காக அனைத்து மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் மொத்தம் ரூ.3.68 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஸ்டார் அகாடமி மற்றும் பண்டைய கலைகளை பாதுகாத்து மேம்படுத்த கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.11.83 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய தற்காப்பு விளையாட்டு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம், 18 சட்டப்பேரவை தொகுதிகளில் தலா ரூ.3 கோடி வீதம் மொத்தம் ரூ.54 கோடி மதிப்பீட்டில் முதல்வர் சிறு விளையாட்டரங்கங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 39 நபர்களுக்கு முதல்வர் மாநில விளையாட்டு விருதுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.