சென்னை: வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஜாமீன் கோரி அவரது கணவர், மாமனார், மாமியார் தாக்கல் செய்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ அனுப்பியிருந்தார்.
இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மூவரின் ஜாமீன் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த்து.
இதனையடுத்து ,மூவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி, எம்.நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக ரித்ன்யாவின் தந்தை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, காவல்துறை பதிலளிக்க அவகாசம் அளித்த நீதிபதி வழக்கை ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.