சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், ராயப்பேட்டை – ராதாகிருஷ்ணன் சாலை வரையிலான சுரங்கப்பாதை பணி இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கத் திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன. பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், 3-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக ராயப் பேட்டையிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலை (ஆர்.கே. சாலை) நோக்கி 966 மீ. வரையிலான சுரங்கப்பாதை அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இப்பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி தொடங்கியது. இந்த பணியில் ‘பவானி’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஈடுபட்டுள்ளது. தற்போது, இந்த இயந்திரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை நிலையத்துக்கு மிக அருகில் இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்த குறிப்பிட்ட தடத்தில் பாறை மற்றும் களிமண் இருக்கும் என்றும், சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடினமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புவியியல் சவால்கள் இல்லாமல் மிகவும் மென்மையான பகுதியாக இருந்தது.
இப்பாதை பெரும்பாலும் மணல் மற்றும் வண்டல் மண் கொண்டது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் எந்த இடையூறுகளையும் சந்திக்கவில்லை. தற்போது இப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ராதாகிருஷ்ணன் சாலை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒ.டி.ஏ. நங்கநல்லூர் சாலை மெட்ரோவுக்கு புதிய நுழைவு வாயில் அமைக்க ஒப்பந்தம்: ஒ.டி.ஏ. நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய நுழைவு வாயில் அமைக்க, ஸ்ரீ ராதா கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரூ.8.52 கோடியில் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இதுவரை நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்துக்கு ஒரே ஒரு நுழைவு வாயில் மட்டுமே இருக்கிறது.
இப்போது கட்டப்படவுள்ள இந்த கூடுதல் நுழைவு வாயில், ஜி.எஸ்.டி. சாலையின் இருபுறங்களிலும் நிலையத்தை எளிதாக அணுகுவதற்கான வசதியை வழங்கும். இந்த புதிய வசதி, குறிப்பாக நெரிசல் மிகுந்த நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைப்பதோடு, அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் வர்த்தகப் பகுதிகளுக்கு தடையற்ற இணைப்பை ஏற்படுத்தும். இதனால் தினசரி மெட்ரோ பயணிகள் பயன்பெறுவார்கள் என்று கூறினர்.