ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 7 பேருக்கு இலங்கை நீதிமன்றம் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஈசாக் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ரூதர், சண்முகம், எடிசன், சக்திவேல், ஜெகதீஷ், டல்வின் ராஜ், அன்பழகன் ஆகிய 7 மீனவர்கள் நெடுந்தீவு அருகே பாக் நீரிணை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஜுலை 13ம் தேதி கைது செய்தனர்.
படகுகளிலிருந்த 7 மீனவர்கள் மீது, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் நீதிமன்ற காவல் வெள்ளிக்கிழமையோடு (இன்று) நிறைவடைந்ததை தொடர்ந்து 7 மீனவர்களும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் 7 பேரில் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 6-ம் தேதி வரை (இரண்டாவது முறையாக) நீட்டித்து உத்தரவிட்டார். தொடர்ந்து, ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.