திருநெல்வேலி: தேர்தல் ஆணைய முறைகேடு குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாகும் என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதியேற்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார், மாநகராட்சி துணை மேயர் ராஜு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்று போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பணியை சிறப்பாக செய்த பள்ளி, கல்லூரிகளுக்கு சட்டப் பேரவை தலைவர் விருது வழங்கி பாராட்டினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு கூறியது: ”மாநில கல்வி கொள்கையின் அடிப்படையே இரு மொழி கொள்கைதான். சாமானியனும் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணா காலத்திலேயே போராடி இரு மொழி கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது.
11-ம் வகுப்பு பொது தேர்வு மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிலும் காலாண்டு, அரையாண்டு, இறுதித் தேர்வுகள் உண்டு. மத்திய அரசு புதிய கல்வி கொள்கையில் 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஆணையிட்டுள்ளது. அதில் தோல்வி அடையும் மாணவர்கள் குலத்தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். குழந்தைகள் தொழிலுக்கு செல்லக் கூடாது என்கிற தடை சட்டம் இருந்தபோதிலும் இதுபோன்று மத்திய அரசின் சட்டத்தால் குழந்தை தொழிலாளர்களை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நாள அன்று மாலை 5 மணிக்கு மேலாக 7 முதல் 10 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகிறது குறித்து கேள்வி எழுப்பினால் தேர்தல் ஆணையம் முறையாக பதில் சொல்வதில்லை. இது குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்டு சொல்கிறது. அவ்வாறு மன்னிப்பு கேட்க சொல்ல அவர்கள் அரச பரம்பரை அல்ல, பாரத பிரதமர் அரசரும் அல்ல. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தேர்தல் ஆணையரிடம் மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாக இருக்கிறது” என்று அப்பாவு கூறினார்.