விருதுநகர்: “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்பதை கண்டுபிடிக்க காவல் துறை தவறியுள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
மதுரை திருப்பங்குன்றத்தில் இம்மாதம் 22ம் தேதி பாஜக சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. அதையொட்டி, விருதுநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் சூலக்கரையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “இந்த மாநாட்டில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திலிருந்து 20 ஆயிரம் பேரும், மேற்கு மாவட்டத்திலிருந்து 16 ஆயிரம் பேரும் பங்கேற்க வேண்டும். மற்ற மாவட்டங்களைவிட விருதுநகர் மாவட்டத்திலிருந்து அதிகமானோர் பங்கேற்பர். விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெறும்.
படிப்படியாக நமது வெற்றி நெருங்கிக் கொண்டே இருக்கிறது. தேசிய ஜனநாயக ஆட்சி தமிழகத்தில் மலருவதற்கு இந்த மாநாடு முன்னோட்ட மாக அமைய வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக மக்களை நாம் சம்பாதிக்க வேண்டும். இந்த மாநாட்டின் மூலம் அரசியல், நமது பண்பாடு, கலாசாரம் பாதுக்கப்பட வேண்டும்” என்று பேசினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ஜூன் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். மாநாட்டில் அசம்பாவிதம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அவர் பக்தியான நபர். ஆனால், பக்தி இல்லாத இடத்தில் இருந்து கொண்டு தீய எண்ணங்களுடன் பேசுவது வருந்தத்தக்கது.
ஞானசேகரன் வழக்கில் தீர்ப்பை வரவேற்கிறோம். யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க காவல் துறை தவறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் யார் அந்த சார் என்பதை கண்டுபிடிப்போம் என்று கூறியது வரவேற்கத்தக்கது. தினசரி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. 157 நாளில் விரைவாக இந்த வழக்கை முடிக்க வேண்டிய அவசியம் என்ன? 4 ஆண்டுகளாக நிறைய பாலியல் வழக்குகள் உள்ள நிலையில், ஞானசேகரன் வழக்கில் மட்டும் முதல்வர் ஆர்வம் காட்டியதுதான் சந்தேகம்.
முதல்வரின் கருத்து எல்லாமே தவறான கருத்து. நீட் தேர்வு விலக்கு வராது என்பது தெரியும். குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.தற்போது மீண்டும் தீர்மானம் கொண்டுவந்தால் அதை ஆளுநர் எவ்வாறு அனுமதிக்க முடியும்? ஆளுநருக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மாநில முதல்வருக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதுதான் திமுகவின் வேலை” என்று கூறினார்.